Tamil Poem Picks
Poems
இரவு
இரவென்னும் தாய்மடியில் தலை வைத்து
இவ்வுலகம் மகிழ்வோடு கண்ணுறங்கும்
இரவினது முடிவினிலே பகல் பிறக்கும்
இன்பங்கள் துன்பத்தின் பின் பிறக்கும்
இரவிற்கு எண்ணில்லா கண்களுண்டு
இன்னல்களை நீக்குகின்ற மருந்துமுண்டு
இரவென்னும் இதமான பொழுதினிலே
இதயங்கள் இளைப்பாற இடமுமுண்டு
எண்ணங்கள் எழுச்சியுற இரவு வேண்டும்
இதயங்கள் அமைதிபெற இரவு வேண்டும்
உள்ளங்கள் உறவாட இரவு வேண்டும்
உணர்வுகளை பரிமாற இரவு வேண்டும்
அன்புள்ளம் தழைப்பதற்கு இரவு வேண்டும்
அறிவாற்றல் முகிழ்ப்பதற்கு இரவு வேண்டும்
கண்ணுறக்கம் கொள்வதற்கு இரவு வேண்டும்
கனவுகளில் மிதப்பதற்கு இரவு வேண்டும்
இரவென்னும் பொழுதே வருக
இதயப் புண்களை ஆற்றிட வருக
உறவுகள் வளர்த்திட வருக
உலக உயிர்கள் மகிழ்வுற வருக
திறமைகள் தழைத்திட வருக
தீஞ்சுவைச் கனவிலே கணித்திட வருக
கரவிலா மனதினைத் தருக
காவிய சோலையில் நடமாட வருக
இரவில்
ஒரு பெண்
வெட்கத்தில் ஓடி ஒழிந்தவள்
சிறிது சிறிதாகத்தான் முகம் காட்டினாள்.
படபடத்து காத்திருந்தேன்
ஈரேழு நாட்கள் அவள் முகம் காண!
ஒளிரும் அவள் வட்ட முகத்தைக் கண்டபோது--
நான் பிரமித்து நின்றேன்
அவள் அழகில் மயங்கி--
ஒ! நிலாப் பெண்ணே!
|