Tamil Poem Picks
Poems
பண்டிகை
காலங்கள்
சின்னஞ் சிறிய சிறார்கள் எல்லாம்
வண்ண வண்ணப் பறவைகள் போல
ஒன்றாய் இணைந்து உவகை அடைந்து
இன்பம் காண்பது பண்டிகை ஆகும்
மண்ணின் மரபு மாய்ந்து விடாமல்
மக்கள் என்றும் மகிழ்வுடன் வாழ
முன்னோர் வகுத்த வழிகளைப் பேணி
இன்பம் காண்பது பண்டிகை ஆகும்
உறவும் நட்பும் ஒன்றாய் கூடி
உள்ளம் கலந்து உணர்வினைப் பகிர்ந்து
அறுசுவை உணவை அளவுடன் உண்டு
இன்பம் காண்பது பண்டிகை ஆகும்
புத்தம் புதிய ஆடைகள் அணிந்து
தித்திக்கும் சுவை பண்டங்கள் செய்து
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்பி
இன்பம் காண்பது பண்டிகை ஆகும்
இன்னிசை முழக்கம் எங்கெனும் ஒலிக்க
ஆடல் பாடல் அழகுறு கலைகள்
கண்டு களித்து கவலைகள் மறந்து
இன்பம் காண்பது பண்டிகை ஆகும்
|